தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி
- தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி

INTRODUCTION

Natarajar Dhyanasabai Neyveli,
Sivapuram Complex,
Vellore Salai, Block-16,
Neyveli-607801.

email: ndsneyveli@gmail.com

This site is being hosted and maintained by Panniru Thirumurai Valarchi Kazhagam, Neyveli

Tuesday 17 October 2023

முருகன் கோவில்கள்

 முருகன் அபூர்வ கோலத்தில் காட்சி தரும் 25 கோவில்கள்

 

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். ஆனால் முருகப் பெருமான் குழந்தை, வேடன், சன்னியாசி, தவக்கோலம், லிங்க ரூபம் என பல தலங்களில் மிக அபூர்வமான கோலத்தில் காட்சி தருகிறார். திருஆவினன்குடி என அழைக்கப்படும் பழனி திருத்தலத்தில் மூன்று கோலங்களில் முருகனை தரிசனம் செய்யலாம். பெரியநாயகி அம்மன் கோவிலில் மயில் இல்லாத முருகனையும், மலைக்கோவிலில் தண்டாயுதபாணியாக ஆண்டிக் கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும் காட்சி தருகிறார். இது போல் முருகன் அபூர்வ கோலங்களில் காட்சி தரும் கோவில்கள் பற்றி இங்கு காணலாம்.

1. முருகப் பெருமான் ஒரு கையில் வில்லுடனும், மறு கையில் வேலுடனும் காட்சி தரும் தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிடைக்கழி.

2.
சனி பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்கும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் முருகப் பெருமான் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.

3.
இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தரும் தலம் ஈரோடு - சென்னிமலை . இந்த கோவிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும்.

4.
வழக்கமாக அம்மனுக்கு தான் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகர் குடைபிடித்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.

5.
கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயத்தில் மருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.

 

6. திருவையாறு ஐயாரப்பர் சன்னதி பிரகாரத்தில் கையில் வில், அம்புடன் இருக்கும் தனுசு சுப்ரமண்யராக முருகன் அருள் செய்கிறார்.

7. திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாய் காட்சி தரும் முருகப் பெருமான், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்துல இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்கும் தயாராகும் கோலத்தில் காட்சி தருகிறார்.

8. நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இந்த முருகனின் சிலையில் வியர்வை துளிர்ப்பது அதிசய நிகழ்வாகும்.

9. மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் தலத்தில் முருகன், கையில் தண்டம் ஏந்திய கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அவர் கண்களில் நீர் வரும் காட்சி வியப்பான ஒன்றாகும்.

10. மயிலாடுதுறை - திருவாரூர் மாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி பாலமுருகனாக முருகப் பெருமான் காட்சி தருகிறார்.

 

11. திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் முருகப் பெருமான் மூன்று கண்களுடனும், எட்டு திருக்கரங்களுடனும் காட்சி தருகிறார்.

12. புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணனூர் திருத்தலத்தும்ம பழமையான கோயிலில் முருகன், ஒரு கையில் ஜப மாலையுடனும், மறு கையில் சின் முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

13. முருகன் பாம்பு வடிவில் காட்சி தரும் ஒரே திருத்தலம் காட்டி சுப்ரமணியா கோவிலாகும். கர்நாடக மாநிலம் குக்கே சுப்ரமண்யா கோவிலில் இந்த முருகனை தரிசிக்கலாம். இந்த பகுதியில் பாம்புகள் யாரையும் தீண்டுவதுமில்லை, பாம்பு யாரும் துன்புறுத்துவதும் இல்லை.

14.கனககிரி தலத்தில் முருகன் பெருமான் கையில் கிளியை ஏந்தி காட்சி தருகிறார்.

15. செம்பனார்கோவில் திருத்தலத்தில் முருகப் பெருமான் ஜடாமகுடம் தாங்கி, இரண்டு கைகளிலும் அக்கமாலை ஏந்தி, தவக்கோலத்தில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.

 

16. மாமன் திருமாலைப் போல் முருகப் பெருமானும் கையில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் கோவில் கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.

17. பூம்புகார் அகே உள்ள மேலையூரில் திருச்சாய்க்காடு சாயாவனேஸ்வரர் கோவிலில் முருகப் பெருமான் வில், அம்புடன் பஞ்சலோக சிலை வடிவில் காட்சி தருகிறார்.

18. ஜோலார்பேட்டை ஏலகிரி மையில் ஜலகாம்பாறை என்னும் இடத்தில் உள்ள முருகன் கோவிலில் விக்ரஹம் கிடையாது. ஏழு அடி உயர வேல் மட்டுமே காட்சி தருகிறது. வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயம் இது.

19. பெரம்பலூர் அருகில் உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் முருகன் கரும்போடு காட்சி தருகிறார்.

20. நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி என்ற தலத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பாலமுருகனாக தொட்டிலில் தவழ்ந்து உறங்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

 

21. திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள வில்வாரணி என்னும் ஊரில் அமைந்துள்ள நட்சத்திர கிரி மலையில் சுயம்பு வடிவ லிங்க திருமேனியாக, நாகாபரணத்துடன் முருகன் காட்சி தருகிறார். முருகனும், சிவனும் ஒரே வடிவமாக அமைந்திருக்கும் கோலத்தை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

22. சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் முருகப் பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறம் ஆடும், வலப்புறும் மயிலும் எதிரெதிரே இருக்கும் வகையில் காட்சி தருகிறார்.

23. ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் தலத்தில் உள்ள நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் கோலத்தில் முருகன் காட்சி தருகிறார்.

24. நாகப்பட்டினம் மாவட்டம் திருவிடைச்சுழி என்னும் ஊரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமான் தவக்கோலத்தில் காட்சி தருகிறார். முருகனுக்கும், தெய்வானைக்கும் நிச்சயதார்த்தம் நடந்த தலமாக இது கருதப்படுகிறது.

25. நாகப்பட்டினம் மாவட்டம் பொரவாச்சேரி கந்தசாமி கோவிலில் உள்ள மூலவர் கந்தசாமி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டதாகும். மயில் மீது அமர்ந்த நிலையில் இருக்கும் முருகனின் திருமேனி, மயில், திருவாசி உட்பட மொத்த எடையையும் மயிலின் கால்கள் தாங்கி நிற்பது அதிசயமான காட்சியாகும்.




No comments:

Post a Comment